பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு நாள் அறிவிப்பை ஏற்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளை நவம்பர் 1ம் தேதி கொண்டாட கடந்த ஆண்டில் அதிமுக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தேதி மாற்றப்படுவதாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இனி ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி அன்றுதான் தமிழ்நாடு நாள் என மாற்றி மு.க.ஸ்டாலின் அறிவித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று அதிமுக தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு நாள் என்று பெயர் சூட்டக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட நாளும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளும் மிகவும் முக்கியமானவை. அந்த நாட்களை அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன், தனிப்பெயர் சூட்டி கொண்டாடுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அந்த நாட்களை ‘‘தமிழ்நாடு நாள்’’ என்று கொண்டாட முடியாது. இன்றைய தமிழ்நாட்டின் எல்லைப்பரப்பு உறுதி செய்யப்பட்ட நாளும், இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளுமான நவம்பர் ஒன்றாம் நாள் தான் தமிழ்நாடு நாள் ஆகும்.
இதை மாற்ற முடியாது. இன்றைய தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகின்றன. முதலமைச்சர் கூறுவதைப் போன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகளாகின்றன. தமிழ்நாட்டின் வயது என்ன? என்று வினா எழுப்பட்டால், அதற்கான விடை எது? என்ற குழப்பம் ஏற்படும். தமிழர்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காவும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது இத்தகைய குழப்பங்கள் தேவையற்றவை. சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை, தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றன.
அதேபோல், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. இதை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. இந்தக் கோரிக்கையை முன்வைத்து நவம்பர் ஒன்றாம் நாளில் பல்வேறு விழாக்கள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று 2019-ஆம் ஆண்டு அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு அறிவித்தது. அதை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொண்டது. எவரும் எதிர்க்கவில்லை.
கடந்த ஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாட்டப்பட்ட போது கூட அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். எனவே, இன்றைய தமிழ்நாடு நிலப்பரப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதியே தொடர்ந்து தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஜூலை 18ஆம் தேதியையும், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜனவரி 14-ஆம் தேதியையும் அவற்றுக்கு உரிய சிறப்புகள், முக்கியத்துவத்துடன் தனி விழாக்களாக கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கலாம்’
இவ்வாறு அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
























