கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப்பெரியாறு அணை தமிழக மக்களின் உரிமை என்றும் கேரள அரசு இதில் கேடு செய்ய முயல்கிறது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு படகு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. 20 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாறில் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

யானை, கரடி, புலி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வரும் இடத்தில் அணைக்கட்டு சார்ந்த அலுவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ளதால் அவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு மும்முனை மின்சாரம் தரப்பட வேண்டும். அனைத்து அதிகாரிகளும், அணைக்கட்டில் பணிபுரியும் ஊழியர்களும் காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்கள் வாங்குவதற்கு குமுளி, தேக்கடிக்கு தாராளமாகச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தமிழக அதிகாரிகள், பத்திரிகைத் துறையினர் அணைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும்.
வல்லக்கடவு பாதையை சரிசெய்து தர வேண்டும். பேபி அணையை வலுப்படுத்த இடையூறு செய்யக் கூடாது. முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் தென் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீராகும். ஆகவே 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்குத்தான் செல்லும். 555 அடி உயரம் உள்ள இடுக்கி அணையின் நீர் மட்டத்தை மழை காலங்களில் இடுக்கி மாவட்டத்தில் அபாய எச்சரிக்கை விடப்பட்டவுடன், இடுக்கி அணை நீர்மட்டத்தை 455 அடி என 100 அடி குறைக்க வேண்டும்.
கேரள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இரு மாநில அரசுகளும் நேச உறவை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். கேரள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக மக்கள் செய்துதர தயாராக உள்ளனர். இரு மாநில அரசுகளும் நல்லுறவை வலுப்படுத்த வேண்டியது முக்கியக் கடமையாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
























