நாளை (அக்டோபர் 30 ) உலக சிக்கன நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.
உலக சிக்கன நாளை முன்னிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
”உலக சிக்கன நாள் அக்டோபர் 30 அன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிக்கன நடவடிக்கையைக் கடைபிடித்து சிக்கனமாக வாழ்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலிறுத்துகிறது.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
பேகாறு அகலாக் கடை
என வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழ வேண்டும் என்பதுடன் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
சிறுக சிறுக சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்கு தேவைப்படும் அவசரத் தேவைகளை எளிதில் எதிர் கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் நம்முடைய வருவாயில் ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது.
மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தான்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்ப பெற முடியும். இந்த வகையில் அஞ்சலங்கங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை.
தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன் பல பெற்றிட இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
























