அரசுத் தேர்வுகள் இயக்ககம், 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
’8-11-2021 அன்று தொடங்கவுள்ள 8ஆம் வகுப்பு தனித் தேர்வினை எழுத அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 29-10-2021 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை ‘கிளிக்’ செய்தால், “இஎஸ்எல்சி நவம்பர் 2021 தேர்வு- ஹால் டிக்கெட் டவுன்லோடு” என்ற தலைப்பின் கீழ் உள்ள “டவுன்லோடு” என்ற வாசகத்தினை “கிளிக்” செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 8 ஆம் தேதி 8ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
























