மதுரை கோரிப்பாளையத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் குரல் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதிமுக – அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், இன்றே மரியாதை செய்தார் சசிகலா. நேற்று தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக மாலை மதுரை வந்திருந்த அவர், தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். அங்கு கூடியிருந்த அதிமுக கொடியுடன் தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
சசிகலா, இன்று காலை 8 மணி அளவில் விடுதியில் இருந்து கிளம்பி, ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் கோரிப்பாளையம் வந்தார். காலை முதலே மழை பெய்த நிலையில், அதிமுக, அமமுக கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா பயன்படுத்திய, அதே பிரச்சார வாகனத்தில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், சசிகலா அங்கிருந்து கிளம்பி பசும்பொன் சென்றார்.
























