வன்னிய சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள் இருக்குமானால் அந்த இடங்களை இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
உயர்கல்வித்துறையின் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவில் ‘கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் வன்னியருக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருக்குமேயானால் அந்த இடங்களை மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை மற்றோர் பிரிவினரைக் கொண்டு சுழற்சி முறையில் நிரப்பிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வட மாவட்டங்களில்தான் வன்னியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால் தென்மாவட்டங்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் பெரும்பாலானவை காலியாக இருந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள், சீர் மரபினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்புவதற்கான இந்த உத்தரவை உயர்க் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு, சீர் மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருக்குமேயானால் அவ்விடங்களை வன்னியர்களை கொண்டு நிரப்பிட ஏதுவாகவும் திருத்தம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
























