தமிழக அரசின் இந்து அறநிலைய துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து அறநிலையத் துறை சார்பில் அக்டோபர் 13ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை எதிர்த்து கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தன் மனுவில், தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டப் பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அவர் தன் மனுவில் கேட்டிருந்தார்.
அந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்ற விதி உள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி.
























