கடந்த 12-ந்தேதி முதல் கேரளாவில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்க்கிறது. இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பை உள்ளிட்ட கேரளாவின் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், இடுக்கி உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்தும் பன்மடங்கு அதிகரித்தது. இதன் காரணமாக அணைகளிலிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதனால் மழை வெள்ளத்துடன் அணை நீரும் சேர்ந்ததால் கேரளா முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் ஒரு பக்கம் பாதிப்புகளை ஏற்படுத்த அதோடு, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாலக்காடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது.

தொடரும் இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்திருக்கிறது. 4 பேரை காணாமல் மீட்புப் படையினர் இன்னும் தேடி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 435 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, முகாம்களில் சுமார் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் சுழற்சி காரணமாக கேரளாவில் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அங்கே, கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மலையோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
























