சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடவும், விமானங்களை ரத்து செய்யவும் அந்நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வரும் நிலையில் சீனாவில் மீண்டும் அது அதிகம் பரவ தொடங்கியுள்ளது. இந்த அடுத்த அலைப் பரவல் அண்டை நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வடக்கும் மற்றும் வடமேற்கு மாகணங்களில் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அங்கே நாடு முழுவதும் மின்தடையும் அதிகரித்துள்ளது. இதனால் நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பரவியுள்ள லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் பிற மாகணங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனையை லான்சோ மற்றும் ஜியோன் பகுதிகளில் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் சுற்றுலா தலங்களை உடனடியாக மூடவும் சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுதான் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் அண்டை நாடான சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
























