முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோரின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மூன்று இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சோதனை சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட் 6 மாவட்டங்களில் நடைபெற்றது. அந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடந்தது.
சென்னை சேத்துபட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது, 2013-2021 ஆண்டுகளில் வருமானத்தைவிட அதிகளவு சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவி பெயரில் பொருந்தாத வகையில் ரூ. 27.22 கோடிக்கு விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் கல்வி நிலையங்களை தொடங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முதல் கட்ட சோதனையின் போது கோவையில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் இல்லத்தில், 15 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இந்நிலையில், இன்று விஜயபாஸ்கர் தொடர்புடைய நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
























