வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தாதா சாகேப் பால்கே’ விருது இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான இந்த விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில். அவருக்கு வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்த விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’தாதா சாகேப் பால்கே’ என்பவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஆவார். அவர் பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த விருதை ஏற்கனவே பெற்றவர்கள் ஆவார்கள்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை பெறவுள்ளார். முன்னதாகக் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்த நிலையில், வருகிற 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய நாளில் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளும் இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளன.
அந்த விழாவில் சிறந்த படத்துக்கான தேசிய விருது, ‘மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்கம்’ என்ற மலையாள மொழிப் படத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரனில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுசுக்கு வழங்கப்படுகிறது. மேலும், ‘போன்ஸ்லே’ என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் அந்த விழாவில் தேசிய விருது பெற இருக்கிறார்கள்.
மேலும், விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே… பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
























