மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் மிகுந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு இன்று அகற்றினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது ஆகும். நாள்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடக்கக்கூடிய நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல்வேறு கடைகளால் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து மதுரை மாநகராட்சிக்கு இப்பிரச்சினை குறித்துப் புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி, மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு இன்று அகற்றினர். தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் உள்ள பிற பகுதிகளிலும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
























