1980ல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்பு சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஆவணமொன்றை ஒன்றிய அரசு வெளியிட்டு, நவம்பர் 1ம் தேதிக்குள் மக்களின் கருத்துக்களை தெரிவிக்க கேட்டுள்ளது. காடுகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று நினைக்காமல் இந்த வரைவுக்கு நாம் அனைவரும் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். இந்த வரைவு முழுவதும் வனத்தைப் பாதுகாப்பாதாகக் கூறி பழங்குடியினருக்கு எதிராகவும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானதாகவும் இருக்கின்றன. தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மலையாளி, இருளர், குரும்பர், சோளகர், காட்டு நாய்க்கர், தோடர், கோதர், பளியர், மலசர், மகா மலசர், புலையர், காணிக்காரர் என பல இனங்களாக வாழும் பழங்குடி மக்கள் லட்சக்கணக்கானோர். வனத்தை விட்டொரு உலகத்தை அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். வனம் மற்றும் வனம் சார்ந்த வாழ்வோடு இயற்கை அன்னையின் அரவணைப்பில் இயற்கையின் ருசிகரத்தை உணர்ந்து வருபவர்களும் இவர்கள்தான்.
பல தலைமுறைகள் தொட்டு வனம் மற்றும் வனம் சார்ந்து வாழும் பூர்வகுடிகள் இவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று நேற்றல்ல ஆறாயிரம் ஆண்டுகளாய் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதிற்கான ஆதாரமாய் சில கல்வெட்டுக்கள் உள்ளன.
உண்ண உணவையும், உடுத்த உடையையும், இருக்க இடத்தையுமேயன்றி பெரிதளவான ஆசைகளற்று வாழ்ந்து வரும் மனித ஜீவன்கள். இவர்கள் இயற்கையின் மதிப்பை உணர்ந்தவர்கள். தனக்கென வேண்டி இயற்கையை சீர்குழைக்க இவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. தனது தேவைக்காக மரம் வெட்ட நேர்ந்தால் கூட சில வகை மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெட்டுவார்கள். அழியும் தருவாயில் இருக்கும் மரங்களைத் தொடவே மாட்டார்கள். இயற்கையின் மீது இவர்கள் காட்டும் கரிசனம் கொஞ்ச நஞ்சமல்ல!

வனப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்ல வந்த வெள்ளைக்கார கும்பலை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் போராளிகள் இவர்கள்தான். இயற்கையோடு இயைந்து இன்றும் வாழ்ந்து வருபவர்களும், வனத்தையும், வன விலங்குளையும் தங்களது கடவுளாய்ப் போற்றி வணங்குபவர்களும் இவர்கள்தான் என்பதற்கு சிறு உதாரணம் மின்சாரம் தாக்கியோ, நோய்வாய்ப்பட்டோ யானை இறந்து விட்டால் அந்த யானைக்கு சூடம் கொளுத்தி வணங்குபவர்கள் இவர்கள்தான். வனத்தைச் சார்ந்தே வாழ்ந்தும், வனப்பொருள் சேகரத்தின் மூலம் பசியாறியும் இன்றளவும் ஆதிக்க வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி தங்களது உழைப்பு முழுவதும் சுரண்டப்படுவதைக் கூட அறியாது வாழ்ந்து வருபவர்களும் இவர்கள்தான்.
அரசிற்கும் இந்தப் பழங்குடி மக்களுக்கும் நீண்டதொரு இடைவெளி. இதனாலேயோ என்னவோ இவர்களின் ஒடுங்கிய குரல் அரசின் செவிகளுக்கு எட்டுவதே இல்லை.
காலங்காலமாய் வாழ்ந்து வரும் இந்தப் பூர்வகுடிகளுக்கு காடுகள்தான் உலகம் என்பதை விட இவர்களது உரிமை என்றே சொல்ல வேண்டும். காடுகளை விடுத்து வேறொன்றை இவர்களால் நினைத்தும் கூடப் பார்க்க முடியாது. காடுகளிலேயே தனது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்ட மக்களை திடீரென்று வெளியேறச் சொன்னால்..?
வனத்தைப் பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அரசின் எண்ணம் வரவேற்கத்தக்கதுதான். அதற்காக பழங்குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வு கண்டிக்கத்தக்கது. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘கூட்டு வள மேலாண்மை’ என்கிற பெயரில் பழங்குடி மக்கள் ஒத்துழைப்போடு வனத்தைப் பாதுகாத்தல் என்ற திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. வனத்தை பாதுகாக்க பழங்குடி மக்கள் தேவை என்பதை அரசு அன்றே உணர்ந்திருந்த போதிலும் ஏன் இந்த அதிரடி..?

உலக மயமாக்கலின் விளைவுதான் இந்த அதிரடிக்கு காரணம். அந்நியக் கம்பெனிகளுக்கு வனத்தை அரசு தாரை வார்த்துக் கொடுக்கிறது. அதற்கு குறுக்கே நிற்கும் பழங்குடியின மக்களை வெளியேற்றுவதுதான் இதன் நோக்கம் என்பது தெள்ளத்தெளிவாய்த் தெரிகிறது. தற்போது புலிகள் சரணாலயம் அமைப்பதற்காக மக்கள் வெளியேற்றப் படுவது போலத்தான் நர்மதா அணைக்கட்டுத்திட்டத்தில் அங்கிருந்த பழங்குடி மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பீகார், ஒரிஸா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் இருந்த பழங்குடி மக்கள் துரத்தப்பட்டு, அந்த வனப்பகுதிகள் அந்நிய நாட்டுக் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. வனத்திலுள்ள கனிம வளங்களை அந்நியக் நிறுவனங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்த பழங்குடி மக்கள் இன்று மாவோயிஸ்டுகளுடன் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனப்பாதுகாப்புச்சட்டம் என்கிற பெயரில் வனத்துக்கு சொந்தக்காரர்களையே வெளியேற்றி அந்நிய நிறுவனங்களை உள்ளே நுழைய விடும் போக்கு நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது அதற்கு எதிர்க்குரல் கொடுக்க http://moef.gov.in ல் உள்ள வரைவை படித்து fca.amendment@gov.in என்ற முகவரிக்கு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
























