கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது.
அந்தக் கப்பலில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து ஆர்யன் கான், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் சிறையில் இருக்கும் தனது மகனை பார்ப்பதற்காக இன்று ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்றார். கடந்த 3 ஆம் தேதி ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஷாருக்கான் இன்று தன் மகனை நேரில் சந்தித்தார். முன்னதாக கடந்த வாரம் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ காலில் பேசியிருந்தனர்.
நேற்றுதான் கொரோனா சூழல் காரணமாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளை மராட்டிய அரசு தளர்த்தியது. முன்னதாக சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு நபர்கள் மட்டும் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
























