கேரளத்தில் தொடரும் கனமழை கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. இதன் விளைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட இந்த 5 மாவட்டங்களில் மழை உக்கிரமாக பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்போடும் இருப்பது அவசியம் எனக்கூறப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், பாலக்காடு, ஆழப்புழா, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களில் அதிஉக்கிரமாக இல்லாவிட்டாலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் கேரள மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
























