சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே நேற்று விஜயதசமி பண்டிகையையொட்டி மும்பையில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில், பாஜக தலைவர்கள், உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வருவது குறித்து பேசிய அவர், கடந்த மாதம் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதை நினைவுகூர்ந்து பாஜகவுக்கு பதிலடி கொடுத்தார்.
மகாராஷ்டிராவில் மட்டும் தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதா? பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் முந்திரா துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன. உங்கள் போதை தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மீட்கும்போது, எங்கள் போலீசார் ரூ.150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றினர். நீங்கள் பிரபலங்களைப் பிடிக்கவும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கவுமே ஆர்வமாக உள்ளீர்கள் என்று உத்தவ் தாக்கரே கடுமையாக சாடினார்.
அமலாக்கப்பிரிவை பயன்படுத்தாமல் நேரடியாக மோதி பாருங்கள். உங்களது கூட்டணியில் இருந்தபோது, நாங்கள் உங்களுக்கு நல்லவர்களாக தெரிந்தோம். நீங்கள் பலமுறை ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தும், எங்களது அரசு அடுத்த மாதம் முழுமையாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் எனது அரசை கலைத்து பாருங்கள்” என்று அவர் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவை பாஜக அவமதித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், மும்பை போலீசாரை மாஃபியா என்று அழைக்கும் நீங்கள், உத்தர பிரதேச போலீசாரை என்னவென்று அழைப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அனைத்து இந்தியர்களின் மூதாதையர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவாத் கூறியதை குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, அப்படியென்றால், எதிர்கட்சிகளின் முன்னோர்கள் மற்றும் விவசாயிகள் எல்லாம் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா? அதிகாரத்திற்காக போராடுவது நல்லதல்ல, அதிகாரத்திற்கு அடிமையாவது என்பது போதைக்கு அடிமையானது போன்றது.
“போதைக்கு அடிமையாகும் போது, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மட்டுமே அழித்துக்கொள்கிறீர்கள். ஆனால், அதிகாரத்திற்கான பசி என்பது மற்றவர்களின் குடும்பங்களை அழிக்கிறது,” என்று அவர் கூறினார்.
























