முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 89), கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணம் அடைந்து வீடு திரும்பினார்.
கடந்த 2 தினங்களாக அவர் காய்ச்சலாலும், உடல் சோர்வாலும் அவதியுற்றதால், அவர் கடந்த புதன்கிழமையன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ”டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், ’முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது. அவர் உடல்நலம் தேறி வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























