பண்டிகை நாட்களை முன்னிட்ட நெருக்கடிகளின் காரணமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து நேற்று முந்தினம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களை காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் பெரிதளவில் தமது சொந்த ஊர் செல்லும் போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவின்படி, 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
























