அண்மையில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலருக்கு ரேஷன் பொருட்கள் இனி கிடையாது என வெளியான தகவலுக்கு தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டு வருமானம் அதிகம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது எனத் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த தகவல் தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளது, தமிழக அரசு.
இது பற்றி அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்குத் தெரிய வந்தது.
மக்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் எல்லோருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று இதனால் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி பெற்றுவரும் தற்போதைய அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம் என இதன் வழியாகத் தெளிவுபடுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிவரும் இதுகுறித்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























