தமிழ்நாடு அரசின் உத்தரவை அடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் தொடங்கி அன்றிலிருந்து நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி அன்றிலிருந்து வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகிறார்கள். இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பொதுவிடுமுறையை தொடர்ந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும் கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் பரீசிலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே நவம்பர் 1 ஆம் தேதி முதல், 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் இன்று ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படுவதற்கான வாய்ப்பில்லை. எனவே, டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
























