கடந்த 3-ம் தேதி உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டார்கள்.
அன்று விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆஷிஷ் மிஸ்ரா சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தற்போது சிறையில் உள்ளார் ஆஷிஷ் மிஸ்ரா.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறை சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றன.

இன்று, அஜய் மிஸ்ராவை மத்திய மந்திரி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். லக்னோவில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் மவுன விரதத்தில் ஈடுபட்டு வருகிறார், பிரியங்கா காந்தி.
























