ஊட்டி மலை ரயில் சேவை கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறையும், மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஒரு முறையும் ரயில் இயங்கி வருகிறது.
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. பிறகு சீரமைப்பு பணி முடிந்து நேற்று மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டி ரயில் நிலையத்தில் அலைமோதியது.
இந்நிலையில், மண் சரிவு மீண்டும் ஏற்பட்டு இன்று கல்லார்-அடர்லி இடையே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரயில் சேவை மறுபடியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்களாக ரத்தாகிய மலைரெயில் சேவை நேற்று மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி இயங்கிய நிலையில், இன்று மண் சரிவு காரணமாக ரெயில் சேவை மறுபடியும் ரத்து செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
























