ஹிப்ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவர் ‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி தற்போது வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார். இசையமைப்பாளராக அறிமுகமான அவர் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அன்பறிவு என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் சத்யஜோதி நிறுவனத்துடன் மரகத நாணயம் திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பது உறுதி செய்யபட்டிருக்கிறது. பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படத்தின் பூஜை ஆயுத பூஜையன்று தொடங்குகிறது. படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படம்பிடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
























