கேரளாவில் உள்ள சபரிமலையில் புகழ் பெற்ற “மண்டல -மகரவிளக்கு” புனித யாத்திரை காலம் இந்த ஆண்டு வரவிருக்கிறது. நவம்பர் மாதம் தொடங்க உள்ள இந்த மண்டல பூஜை காலத்தில் ஐயப்பன் கோயிலுக்கு தினமும் 25,000 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையும் , டிசம்பர் 30 முதல் ஜனவரி 18 வரை ஆகிய நாட்களில் கோவில் திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி உண்டு. கொரோனாவுக்காக இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அல்லது நெகடிவ் சான்றிதழ் வழங்குபவர்களுக்கு மட்டுமே அனுமதி என கேரளா தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. தரிசனத்திற்குப் பிறகு மக்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், நிலக்கல் வரை மட்டுமே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பக்தர்கள் KSRTC பஸ்களில் மட்டுமே பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமேலியிலிருந்து பெரிய பாதை வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு இம்முறை அனுமதி இல்லை எனவும் கேரளா அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் முன் பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் பகுதிக்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
























