கட்சி அமைப்பின் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் முக்கிய ஆலோசனைக் குழுவாக பாஜக தேசிய செயற்குழு செயல்படும். இதில் 80 செயற்குழு உறுப்பினர்கள் தவிர, நிர்வாகத்தில் 50 சிறப்பு அழைப்பாளர்களும் 179 நிரந்தர அழைப்பாளர்களும் இருப்பார்கள். பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பா.ஜ.கவின் தேசிய செயற்குழு, தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிரந்தர அழைப்பாளர்கள் ஆகியோரை நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் தேசிய தலைவர்கள் ஆகியோர் 80 பேர் கொண்ட தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெச்.ராஜா, குஷ்பு ஆகியோர் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
























