கடந்த 10-ந் தேதி உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர், வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். லகிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

உச்சநீதிமன்றம் லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையில் லகிம்பூர் வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
























