அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.
பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேர் மாணவர்கள் ஆவர். வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், சம்பவ பகுதியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

18 வயது மதிக்கத்தக்க திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற நபர், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
























