உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் சேவைகள் திடீரென நேற்றிரவு முடங்கின. இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் இருந்து உலகம் முழுவதும் இச்சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியுற்றனர். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்திருந்த பேஸ்புக் நிறுவனம், இந்த தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் எனக் கூறியிருந்தது.
காலை சுமார் 4 மணி அளவில், கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. ஃபேஸ்புக் நிறுவனம் இது குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”உலகெங்கும் உள்ள பயனாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக” கூறியுள்ளது. சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து முழு அளவில் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தங்கள் ட்விட்டர் பக்கத்தில், இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளும் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில், எதன் காரணமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதன் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
























