2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகத் துவங்கியிருக்கும் நிலையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் விருது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் விருதுக்கான அறிவிப்பு இன்றிலிருந்து துவங்கியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக இவ்விருது டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபோர்ஷியன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. .வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அவை அனுப்பும் செய்திகள் குறித்த இவர்களின் ஆய்வு, நாள்பட்ட வலி தொடர்பான சிகிச்சைக்கும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்கும் பயன்படும் என்று விருதுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
























