கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நீட் தேர்விலிருந்து விலக்குபெறும் முயற்சியில் ஒத்துழைப்புத் தர வேண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கருத்தியல் நிலைப்பாடுகளுடன் ஒத்திசந்த, பாஜக ஆட்சியிலில்லாத 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் இக்கடிதத்தை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2022 என்ற புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன் நகலை இணைத்து இக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் தனது அக்கடிதத்தில் “மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களின் சேர்க்கை உரிமைகளை பறிப்பதன் மூலம், அரசியலமைப்பு அதிகார சமநிலை குழைக்கப்படுகிறது. நீட் தேர்வால், மாநில அரசுகள் வகுத்து வைத்திருக்கும் மருத்துவ சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க, மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். உங்களின் மாநிலங்களிலும் கிராமப்புறங்கள், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் உயர்கல்வி சேர்க்கையில் உள்ள சிக்கல் பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்து, அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உறுதிசெய்ய, எங்களுக்கு ஆதரவு கொடுக்கவும்” என்று அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
























