நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரத்தில் உலவி வந்த ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டி23 என்று பெயரிடப்பட்ட புலி உலவி வந்தது. இதுவரை 4 மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அப்புலி அடித்துக் கொன்றுள்ளது. இப்புலியின் அச்சம் காரணமாக மக்கள் வெளியே நடமாட பயந்த சூழலில் புலியைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க கடந்த 24ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக கூண்டுகள் அமைத்த வனத்துறையினர் புலியை பிடிக்க காத்திருந்தனர். இந்நிலையில் இன்று மசினக்குடியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரை புலி தாக்கிக் கொல்லவே, புலியை பிடிக்க முடியாத சூழலை உணர்த்துவதாக இருந்தது. இதனையடுத்து கூண்டில் புலி சிக்காததுடன் மயக்க ஊசி செலுத்த இயலாததால், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
























