சர்ஜூன் கே.எம். இயக்கத்தில், கலையரசன், மிர்னா மேனன் ஆகியோர் நடிப்பில் ’ஆஹா’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ’புர்கா’ திரைப்படம் பெறும் சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறது. கணவனை இழந்த இஸ்லாமிய பெண் ’இத்தாத்’ எனப்படும் மதச்சடங்கின் காரணமாக தனிமையில் இருக்கும் நிலையில், அவரைச் சந்திக்கும் இந்து இளைஞன் இஸ்லாத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பும் படியாக கதை நகர்கிறது. 1500 வருடங்களுக்கு முன்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இப்பொழுதும் ஏன் கடைபிடிக்கவேண்டும் என்று இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை இப்படம் முன்வைக்கிறது.
இந்நிலையில், புர்கா திரைப்படம் இஸ்லாமிய மார்க்கம் குறித்து தவறாகச் சித்தரிப்பதாக மதப்பற்றாளர்களிடையே கண்டனங்களைப் பெற்றுவருகிறது. பலரும் இதுகுறித்து இயக்குனருக்கு மிரட்டல் விடும்படியான வீடியோக்களை வெளியிட்டு வருவதும், இயக்குநர் சர்ஜூனைக் கைதுசெய்யவேண்டியும், புர்கா திரைப்படத்தை ஒளிபரப்பத் தடைவிதிக்கவேண்டியும் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புர்கா படத்தை ஒளிபரப்புவதைத் தடைசெய்ய வேண்டும் என்று ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் ‘புர்கா’ திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.
நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைக்கலை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது ‘ஆகா’ ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள ‘புர்கா’ திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


























