தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் கார்த்திக் ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 2023-24 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், மாணவர்களுக்கான வேளாண் சுற்றுலா, உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது அறிவிப்பில்,
”நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்துகொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர்நிலைகள் சீரமைப்பு மரபுவிதைகள் பரவலாக்கம் அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
அதோடு சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும் பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாரும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தம் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புறோம்” என்று தெரிவித்துள்ளார்.


























