இவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நோய்த்தொற்றிலிருந்து அவர் மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற இவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்குப்பின் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து டிஸ்சார்ஜ் ஆகவிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து அவர் உடல்நிலை மோசமடைந்ததாக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அவர் கடந்த 15ம் தேதி இருதய நோய் மற்றும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், தற்சமயம் அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருதய பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவந்த அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை உறுதிசெய்யும் வகையில், தான் ஆரோக்கியமாக உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்றும் பேசி இவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.



























