10 ஆண்டுகளுக்கு பின்னர், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது ‘வரும் முன் காப்போம்’ திட்டம்’. தற்போது, ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்’ என்ற பெயரில் புத்துயிர் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காக, வரும் முன் காப்போம் திட்டம், தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரப்படவில்லை.
தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. பரிசோதனையின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோய்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை வழங்கி பொதுமக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் தொடரப்படாமல் கைவிடப்பட்ட இத்திட்டம் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற பெயரில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு, 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. அதாவது ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் என, 385 வட்டாரங்கள் மற்றும் 20 மாநகராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இம்முகாம்களில் இருப்பார்கள். பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்னை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக பரிந்துரைக்கப்படும்.
























