மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். அப்போது, இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனக் கூறினார்.
செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் தொடங்கியது. முடிவில் 28 லட்சத்து 31ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த இலக்கு எட்டப்படவில்லை.
இரண்டாம் முறையாக கடந்த 19ம் தேதி 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 16 லட்சத்து 41 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாலை 6.30 மணிவரை 22 லட்சத்து 8 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் நடத்தப்பட்டது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. இது மிகப்பெரிய வரலாற்று சாதனை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டு தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 12ம் தேதி 909 முகாம்களில் 88 ஆயிரத்தி 890 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 19ஆம் தேதி நடந்த முகாமில் தடுப்பூசி இருப்புக்கு ஏற்றாற்போல் முகாம்கள் நடத்தப்பட்டு 50 ஆயிரத்து 92 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. தற்போது நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு. இதுவரை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 66 ஊராட்சிகளில் 100 சத வீதம் இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் 100 சதவீதத்தை இலக்கை அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் 166 ஊராட்சிகள் 100 சதவீதம் தடுப்பு ஊசியை செலுத்தி இலக்கை பூர்த்தி செய்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் மாவட்டம் திகழ்கிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 683 ஊராட்சிகள் 166 ஊராட்சிகள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என கேட்டு கடிதம் எழுதியுள்ளார், எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பொது மருத்துவம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி சேர்மன் சபா பாலமுருகன், மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் மீரா, ஆர்.டி.ஒ. அதியமான் கவி அரசு, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
























