தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தனது பெயரை பயன்படுத்திக் கூட்டங்களை நடத்த தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை பதிவு செய்தார்.
தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
நடிகர் விஜய் தரப்பில், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 15வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.
























