நான்கு நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதோடு, அமெரிக்க அதிபர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார். சிறப்பு விமானத்தின் மூலமாக வாஷிங்டன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி , நாளை அமெரிக்காவின் முக்கியத் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-ஐ, மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா பிரிட்டன் பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசவிருக்கிறார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து அமெரிக்க – இந்திய நல்லுறவு குறித்து ஆலோசனை செய்யவிருக்கிறார்.
24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் பிரச்னை, பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் என பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து உரையாடவிருக்கிறார். அதற்கடுத்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். அதன் பிறகு 25ம் தேதி நியூயார்க் சென்று ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
























