கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படியில் மீண்டும் பெரும்பான்மையில்லாத அரசாங்கம் அமையவுள்ளது. இரண்டாம் முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழர் ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கார்பரோ ரூக் பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 20,889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆனந்தசங்கரி 2015ஆம் ஆண்டு முதல் முறையாக போட்டியிட்டார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு, அவர் போட்டியிட்ட பொழுது 62.2 சதவீத வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
























