சனி மகா பிரதோஷம்: பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதோஷ தினத்தில் தான் ஈசன், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதுவே திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் அது சனி மகா பிரதோஷமாக மேலும் சிறப்படைகிறது.
சாதாரண பிரதோஷ நாளை ஒப்பிடும்போது, இந்த சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபாடு செய்தால், சனிபகவானால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் கடன் பிரச்சனையால் மிகவும் அவதிப்பட்டு வருபவர்கள், சனிப்பிரதோஷத்தன்று ஈசனோடு சேர்த்து சனிபகவானையும், நந்தி தேவரையும் வழிபாடு செய்து பாருங்கள். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் கடன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் வாழ தொடங்கி விடுவார்கள்.

பிரதோஷ விரதம் :
பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
பிரதோஷ பூஜை:
பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.
பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
சனிப் பிரதோஷ நேரத்தி எல்லா தேவர்களும் சிவ பெருமானின் நாட்டியத்ஹ்டை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோச நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
























