தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பேரறிஞர் அண்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற சி.என்.அண்ணாதுரையின் 113வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தின் திராவிட அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட பல அமைச்சர்களும் எம்.பி கனிமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது குறித்து ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் ”அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
























