நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற அத்திரைப்படத்துக்கு அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கியுள்ளார். புதுமுகம் ப்ரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் சொந்தமாக இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படம் கடந்த மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிகப்பட்டது. பிறகு சட்டமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. பிறகு மே 14 ரம்ஜான் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழல் காரணமாக அதுவும் தள்ளிப்போனது.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ திரைப்படத்தில் மும்முரமாகி விட, நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அடுத்து அடுத்த மாதம் அக்டோபரில் திரையரங்குகளில் ‘டாக்டர்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























