சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள இது போன்ற ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி காவல்நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டனர். அக்குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், காவல் நிலையம் ஏரியில்தான் கட்டப்பட்டுள்ளது என்றும், காவல் நிலையம் மட்டுமின்றி மேலும் பல ஆக்கிரமிப்புகள் இருப்பதால் காவல் நிலையத்தை இடிப்பதால் மட்டும் பலனில்லை என்று கூறியிருந்தது.
இதனையடுத்து, தாமரைக்கேணி நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் அக்குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
“தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அதனை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் தேவைதான் என்றாலும் அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் அழித்துவிடக்கூடாது. சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளது. அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
























