திருநெல்வேலி மாநகரில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில் ”ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழர் நாகரிகம் உலகின் மிகத்தொன்மையான நாகரிகம் என்பதற்கான சான்றுகளாக இவை உள்ளன.
தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிற கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம். பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி மாநகரில் 15 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும். அகழாய்வு பணிகளுக்கு ஏற்கனவே ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
























