ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது அவர்கள் இடைக்கால அரசை அமைத்து அதற்கான பிரதமர் மற்றும் அமைச்சர்களை அறிவித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய முக்கியத் தலைவர்கள் இந்த இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர். பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியாவார். ராணுவ தளபதியாக அறியப்படும் ஹசன் அகுந்த், தற்போது முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தலிபான் அல்லாதவர்களையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் நிர்வாகிகளை தலிபான்கள் அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க முடியாது என அந்நாட்டின் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. மேலும், தலிபான்கள் அமைத்துள்ள அமைச்சரவையில் பெண்களே இல்லை என்பதும், எந்த உயர்நிலைக் கல்வியும் படிக்காதவர் கல்வித்துறை அமைச்சரா? என்பது போன்று பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
























