இறைவர் திருப்பெயர்: கபாலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லியம்மை.
தல மரம்: புன்னை.
தீர்த்தம் : கபாலி தீர்த்தம். திருக்குளம்
உமாதேவி, இறைவனை மயிலாக உருமாறி வழிபட்டதால் இத்தலம் திருமயிலாப்பு என்றும் திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது. இறைவனின் இத்திருக்கோலம் கோயிலினுள் வெளிச்சுற்றில் புன்னை மரத்தடியில் தனிக்கோயிலாக அமைக்கப்பெற்று வழிபடப்படுகிறது.
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும். கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.(“ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை”, “மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” – சம்பந்தர், “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” – திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுகளின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.
ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Goa) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
தொன்மக்கதை
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சிவநேசர் என்கிற சைவ மதத்தைச் சேர்ந்தவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவநேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப்பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப்பூம்பாவைக்கு ஒரு சிறுகோயில் இருப்பதைக் காணமுடியும். இக்கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றன.
வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது. பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருவுருவமும் பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாகத் தனிக்கோயிலாக வெளிச்சுற்றினுள் மேற்குக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் அமைத்து வழிபடப்பட்டு வருகிறது.

இக்கோயிலில் பங்குனி மாதத்தில், அறுபத்து மூவரின் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளதால் இது பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிறது.
இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இது மொத்தம் 806 செய்யுள்களைக் கொண்டுள்ளது. (இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன)
























