கோயில் நகரம் என்றழைக்கப்படுகிற மதுரை முழுவதும் கோயில்களால் நிறைந்திருந்தாலும் மதுரை என்றதுமே மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான் நம் எல்லோரது நினைவுக்கும் வரும். இக்கோயிலைச் சுற்றித்தான் ஈசன் தன் திருவிளையாடல்கள் பலவற்றை நிகழ்த்தினார். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் திருமணவரம் கைகூடுவதோடு கல்வி ஞானத்திலும் சிறந்துவிளங்கலாம் என்பது நம்பிக்கை. `மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்கிற பெயரும் உண்டு.
இங்கு எழுந்தருளியுள்ள அன்னை மீனாட்சிக்கு அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் என்கிற திருப்பெயர்களும் உண்டு.
மன்னன் மலையத்துவஜன் செய்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தை இந்த அன்னை மீனாட்சி. அவள் மூன்று மார்பகங்களுடன் தோன்றியதால் மலையத்துவஜனும் அவன் மனைவியும் கலங்கியபோது ‘இவள் தன் கணவனைக் காணும்போது இவளின் மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்’ என அசரீரி ஒலித்து அவர்களை ஆற்றுப்படுத்தியது என்பார்கள்.
அம்மைக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் மன்னன். அன்னையும் திக் விஜயம் புறப்பட்டாள். பல திசைகளுக்கும் வெற்றி யாத்திரை போனவள், திருக்கயிலாயத்துக்கும் சென்றாள். அங்கு சிவனைக் கண்டதும் அவள் தன் பெண்மையை உணர்ந்து நாணமுற்றாள். அப்போது அவளின் மூன்றாவது மார்பகம் மறைந்தது. அதன் பின்னர் சிவபெருமான் மதுரைக்குச் சொக்கனாக எழுந்தருளி, அம்மையை மணம் புரிந்து கொண்டார் என்பதே இக்கோவிலின் தலவரலாறு.

மீனாட்சியம்மனை மணம் புரிவதற்காக, ஈசன், திருமணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார். மீனாட்சியம்மன் அரசியாக இருந்ததால், அவளுக்கான அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். இந்தத் தலத்தின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது என்பதே இதன் சிறப்பு.
இங்கு அருள்பாலிக்கும் மீனாட்சியம்மனின் திருமேனி மரகதக் கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது. பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர், தொங்கு கரமாக இடது கரம், வலது தோளில் பச்சைக் கிளி, இடது பக்கம் சாயக் கொண்டை, சின்னஞ்சிறுமியின் முகம் என எழில்மிகு திருவடிவாக காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி.
கலியுகத்தில் ஶ்ரீகாஞ்சி காமக்கோடி பீடம் மற்றும் ஶ்ரீசிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் தலையாய வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கிப் பதினைந்து பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடினார். அன்னை அவரின் அருட்பாடல்களில் மகிழ்ந்து பார்வை கிடைக்குமாறு அருளினாள். அன்று முதல் இந்தத் தலத்துக்கு வந்து பார்வை குறைபாடு உள்ளவர்கள், அந்தப் பாடல்களைப் பாடி வேண்டினால் நல்ல சுகம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் நம்பிக்கை.
இக்கோயிலின் சிறப்புகளில் முக்கியமானது ஆயிரங்கால் மண்டபம். கலைக்களஞ்சியமாகத் திகழும் இம்மண்டபத்தை சிற்பக் கலைக்கூடம் என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும். மண்டபத்தில் நுழையும் இடத்திலேயே, விதானத்தில் 60 தமிழ் வருடங்களைக் குறிக்கும் சக்கரம் காணப்படுகிறது. மண்டபத்தின் நாயகமாக, நடராஜபெருமான் காட்சிகொடுக்கிறார். கையில் வாளேந்தியபடி தீயவனுடன் போரிடும் சிவபெருமான், சிவலிங்கத்தின் மீது கால் வைத்தபடியே தனது கண்ணைத் தோண்டும் கண்ணப்பர், பிட்சாடனர், முன்னங்கால்களைத் தூக்கிப் பாயும் குதிரை மீதமர்ந்த வீரர் (அருகில் நரியொன்றும் காணப்படுவதால், இது நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கிய சிவபெருமான்), ஹரிச்சந்திரன்- சந்திரமதி, குறவன்- குறத்தி, முப்புரம் எரித்த சிவனார், நாட்டியமாடும் வல்லப கணபதி, மயிலேறும் முருகர், பாணன்- பாணி, பிருகந்நளையாக இருக்கும் அர்ஜுனன், தட்சனை வதம் செய்யும் வீரபத்திரர், ரதி- மன்மதன், பீமன், புலிக்கால் முனிவர், கர்ணன், மோஹினி, கையில் குழந்தையை ஏந்தியபடி கவலையுடன் நிற்கும் சந்திரமதி, முப்புரம் எரிக்கும் சிவனாரை அடையாளம் காட்டும்படியாக அவருடைய அம்பில் மஹாவிஷ்ணு உருவமும், அம்பு நுனியில் அக்னியும் காணப்பகின்றன. மேலும் கதாயுதத்தை உயர்த்தும் புலிக்கால் முனிவர் என அற்புதமான இறைவடிவங்கள் எல்லாம் சிலை ரூபங்களாக இங்கே காட்சி கொடுக்கின்றன.
பொற்றாமரைக் குளத்தின் அற்புதங்கள்
விருத்திராசுரன் எனும் அரக்கனை, தேவேந்திரன் போரில் கொன்றான். அதனால் அவனுக்கு ஏற்பட்ட பாவம் நீங்க சிவத்தலங்களாகச் சென்று தரிசனம் செய்து வந்தான். எங்கும் தீராத பாவம், தென் தமிழ்நாட்டில் கடம்பவனத்தை அடைந்தவுடனேயே விலகுவதை உணர்ந்தான். அங்கு சுயம்புவாக நின்ற சிவலிங்கத்தைக் கண்டான். இறைவனாரே தனது பாவத்தைத் தீர்த்தவர் என்பதைப் புரிந்துகொண்டு சிவலிங்க பூஜை செய்வதற்கு மலர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அதுவும் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினான்.
அவன் நினைத்த மாத்திரத்தில், அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தோன்றின. தங்கத் தாமரைகள் தோன்றியதால் அது பொற்றாமரைக் குளம் எனப்பட்டது!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐராவத யானை, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, இறைவனை வணங்கிச் சாபம் நீங்கப்பெற்றுத் தன் சுய உருவை மீட்டுக்கொண்டு, தேவலோகம் சென்றது.
ஆற்றங்கரையில் தவம் செய்து வேதம் ஓதிய முனிவர்களைக் கண்டும் அவர்கள் ஓதிய சிவநாமத்தைக் கேட்டும் ஒரு நாரை நல்ல புத்தி கொண்டது. ஆற்றில் சில மீன்களை இரையாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும்… முனிவர்கள் நீராடிய தருணத்தில் அவர்களின் திருமேனியில் குதித்து விளையாடியவை என்பதால், அவற்றைப் பிடிக்காமல் விட்டுவிட்டது. முனிவர்களுடனே மதுரை வந்தது. அவர்கள் பொற்றாமரைக் குளத்தருகில் இருந்தபோதும், குளத்தின் மீன்களைப் பிடிப்பது பாவமென்று கருதி, உண்ணாமலே இருந்து சிவநெறியில் பிறழாது வாழ்ந்த அந்த நாரைக்கு இறைவன் முக்தி கொடுத்த தலமும் இதுவே. இந்தக் குளத்தில் மீன்கள் இருந்து, அவற்றை நாரைகள் தன்னியல்பில் பிடித்துவிட்டால்கூட அவற்றுக்குப் பாவம் வந்து சேருமே என்று பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்துவிட்டாராம் ஈசன்.
தருமிக்குப் பொன் தர ஈசன் செய்த திருவிளையாடலில் நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் நக்கீரன் வந்து வீழ்ந்த இடமும் இப்பொற்றாமரைக்குளம்தான்.
கோயிலின் சிறப்பு
இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவ பெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்பு லிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார். இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெருங்கோயிலை எழுப்பினார். அதனால் தற்போது அது இந்திரன் விமானம் என அழைக்கப்படுகிறது.
இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது. அதனால் இந்த தலத்தில் தரிசித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
























