மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்த அந்நாட்டின் ராணுவம் அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பு சாசனம் இனி செல்லாது என்றும் ராணுவ ஆட்சியே நடக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா, நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய மாகாண ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும், தங்கள் ஆட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ராணுவத்தால் கினியாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரஸ் “துப்பாக்கி முனையில் அமையும் ஆட்சியை ஏற்க முடியாது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
























