‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி, உணவுப் பிரியர்களுக்கும், சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. உலக அளவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இதனை தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தமன்னா திடீரென நீக்கப்பட்டு, அவருக்கு பதில் அனுசுயா என்பவர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத தமன்னா, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் தமன்னாவிற்கு எதிராக வழக்கு தொடந்துள்ளார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் ”மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம். ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
திரையுலகில், தமன்னா மீது வழக்கு தொடர்ந்த விஷயம், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
























