பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குல்காம் மாவட்டத்தில் கடந்த அக்.20ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதி ஒருவர், பாதுக்காப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னதாக இன்று உள்ளூர் கடைக்காரர் ஒருவரை கொலை செய்ய சென்றுகொண்டிருக்கும்போது பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, குண்டுகள், ஒரு வெடி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் ஜாவேத் ஆ வானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் பீகார் தொழிலாளர்களை கொன்ற குல்ஜார் எனும் தீவிரவாதிக்கு உதவியவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























